மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புன்னைக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நூல் மற்றும் துணிகளுக்கு சாயம் போடும் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கடலுக்குள் விடுவதை நிறுத்த வேண்டும் எனவும், கழிவுகள் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கண்காணிக்க குழு ஒன்றை அமைக்குமாறும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் கோரிக்கை வைத்துள்ளார்.
தளவாய் புன்னக்குடா சாயத் தொழிற்சாலை கழிவுநீரினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் குறித்த தொழிட்சாலைக்கான வியாபாரச் சான்றிதழ் வழங்கும் போது விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள் அடங்கிய கோரிக்கை கடிதம் ஒன்றை ஏறாவூர் பற்று தவிசாளரிடம் வழங்கியுள்ளார். குறித்த கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தளவாய் புன்னைக்குடா கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூல் மற்றும் துணி சாயம் போடும் தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவனம் செலுத்தும் வகையில் கண்காணிப்பு குழு அமைக்க கோரல்!
மதிப்பிற்குரிய கௌரவ தவிசாளர் அவர்களுக்கு,
மட்டக்களப்பு தளவாய் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உள்ள நூல் மற்றும் துணிக்கு சாயம் போடும் தொழிற்சாலையாலை கழிவுகளை கவனத்தில் கொண்டு சுற்றுச்சூழல், மீனவர் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதோடு அனுமதி வழங்குவது குறித்து நிபந்தனை விதிக்க கோரிக்கை விடுக்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, பாசிக்குடா ஏறாவூர் பற்று தளவாய் புன்னைக்குடா கடற்கரை பகுதிகள் என்பன இலங்கையின் முக்கியமான கடல் வள, மீன்வளம் மற்றும் சுற்றுலா வளப் பகுதிகளில் ஒன்றாகும்.
இப்பகுதிகளில் பல தலைமுறைகளாக மீனவர் சமூகங்கள் கரையோர மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, இப்பகுதிகளை மட்டக்களப்பு மாவட்டத்தின், சுற்றுலாத்துறை மற்றும் தொழில் துறை வளர்ச்சி மண்டலமாகவு அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தளவாய் புன்னைக்குடா கடற்கரை பகுதியில் நூல் மற்றும் துணி சாயம் போடும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு அதற்கான வியாபாரச் சான்றிதழை பெறுவதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபையின் முயற்சி அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.




ஏற்கனவே குறித்த தொழிற்சாலை தொடர்பாக பொதுமக்கள், மீனவர் சமூகங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களிடையே பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த தொழிற்சாலை கழிவுகளை கடலுக்குள் விடுவது தொடர்பாக ஆரம்பத்திலேயே பல்வேறு சர்ச்சைகள் எழுப்பபட்ட நிலையில் இதற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு சான்றிதழ் முதல் அனைத்து அனுமதிகளையும் அரச திணைக்களங்களும், அதிகாரிகளும் வழங்கியுள்ளனர். இன் நிலையில் தற்போது ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அனுமதிக்காகா விண்ணப்பித்துள்ளனர்.
எனினும், ஒரு பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவெனில், தொழில்துறை வளர்ச்சி அல்லது முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாடு எங்களுக்கில்லை. மாறாக, மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் வள பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பாதுகாப்பான மற்றும் பொறுப்புள்ள தொழில்துறை நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும்.
அந்த வகையில் உலகின் பல நாடுகளில் Textile Dyeing Industry தொடர்பான அனுபவங்கள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை உருவாக்கியுள்ளன.
குறிப்பாக இந்தியாவின் திருப்பூர் (Tiruppur – India), பங்களாதேஷின் புரிகங்கா நதி (Buriganga River – Bangladesh), இந்தோனேஷியாவின் சிதாரம் நதி (Citarum River – Indonesia) போன்ற பகுதிகளில் ரசாயன கழிவுகளால் கடல் மற்றும் நீர்வள மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு மற்றும் மக்கள் உடல்நல பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த அனுபவங்களை கருத்தில் கொண்டு, தளவாய் புன்னைக்குடா கடற்கரை பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பின்வரும் விடயங்கள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இத்தால் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
கட்டாய பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நடைமுறைகள்
1. முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment – EIA)
சுயாதீன நிபுணர் குழுவின் மூலம் முழுமையான EIA அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.
கடல், நிலத்தடி நீர், மீன்வளம் மற்றும் சுற்றுலாத்துறை மீதான தாக்கங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் மீனவர் சமூக ஆலோசனைகள் கட்டாயமாக பெறப்பட வேண்டும்.
2. பூஜ்ய திரவ கழிவு வெளியேற்ற முறை (Zero Liquid Discharge – ZLD)
சுத்திகரிக்காத எந்த வித கழிவுகளும் கடல் அல்லது நிலப்பரப்புக்குள் வெளியேற்றப்படக்கூடாது.
தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் நீர் முழுமையாக மீள் சுழற்சி (Water Recycling System) செய்யப்பட வேண்டும்.
கடலுக்குள் இரசாயன கழிவுகளை வெளியேற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
3. உயர் தர கழிவுநீர் சுத்திகரிப்பு முறைமை (Effluent Treatment Plant – ETP)
பின்வரும் அபாயகர இரசாயனங்கள் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட சேர்மானங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
அசோ சாயங்கள் (Azo Dyes), குரோமியம் (Chromium), ஈயம் (Lead), பாரம் (Mercury), ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), சல்பியூரிக் அமிலம் (Sulfuric Acid), சோடியம் ஹைட்ராக்சைடு (Sodium Hydroxide),அமோனியா (Ammonia), செயற்கை நிறமிகள் (Synthetic Pigments)
இவ்வாறான இரசாயனங்கள் கடல் மற்றும் மனித உடல்நலத்திற்கு பாரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப முழுமையான சுத்திகரிப்பு நடைமுறை பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும்.
4. தொடர்ச்சியான சுற்றுச்சூழல் கண்காணிப்பு பொறிமுறை கட்டாயமான து (Environmental Monitoring System)
தொடர்ச்சியாக பின்வரும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்:
கடல் நீர் தர பரிசோதனை, நிலத்தடி நீர் பரிசோதனை,
pH அளவீடு,
Biological Oxygen Demand (BOD),
Chemical Oxygen Demand (COD),
Heavy Metal Testing, Toxicity Testing
இந்த அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படைத் தன்மையோடு எந்த வித ஒழிவு மறைவு இன்றி வெளியிடப்பட வேண்டும்.
5.அவசரநிலை மற்றும் கசிவு கட்டுப்பாட்டு திட்டம் (Emergency Spill Response Plan)
இரசாயன கசிவு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கும் அவசரநிலை பொறி முறை உருவாக்கப்பட வேண்டும்.
கடற்கரை மற்றும் மீனவர் பகுதிகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் முன்னரே அறிவிக்கப்பட வேண்டும்.
தீ, வெடிப்பு அல்லது கழிவு கசிவு அபாயங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு திட்டம் இருக்க வேண்டும்.
6. மக்கள் மற்றும் மீனவர் பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழு (Community Monitoring Committee)
மிக முக்கியமாக பின்வரும் தரப்புகள் அடங்கிய சுயாதீன கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்
மீனவர் சங்க பிரதிநிதிகள், உள்ளூராட்சி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,
சுற்றுச்சூழல் நிபுணர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.
பொறுப்பு கூறல்
மற்றும் சட்ட அறிவித்தல்கள்.
தொழிற்சாலை நடவடிக்கைகளால் எதிர்காலத்தில்
கடல் மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு, பொதுமக்கள் உடல்நல பாதிப்பு,சுற்றுலாத்துறை சேதம், குடிநீர் மாசுபாடு, வாழ்வாதார இழப்பு,ஏற்பட்டால், அதற்கான சமூக, சட்ட மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புகள் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நேரடியாக வரும் என்பதோடு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கிய திணைக்களங்கள், அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும். என்பதை இத்துடன் நினைவூட்ட விரும்புகின்றோம்.
அத்துடன், தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாத சூழலில்:
சட்ட நடவடிக்கைகள்,சுற்றுச்சூழல் அதிகாரிகளிடம் முறையீடுதல்,
பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறலாம்,
அமைதியான ஜனநாயக போராட்டங்கள் நடக்கலாம், உருவாகக்கூடிய சூழ்நிலைகளும் காணப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கட்டாயம் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அத்துடன் அத்தகைய நிலைமைகள் உருவாகாமல் தடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் பொறுபுடன் நடந்த கொள்ள வேண்டும்.
தளவாய் புன்னைக்குடா கடற்கரை பகுதி என்பது ஒரு சாதாரண நிலப்பரப்பு அல்ல. அது ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம், எதிர்கால சுற்றுலாத்துறை வளர்ச்சியின் மையம், கடல் உயிரியல் வளங்களின் பாதுகாப்புப் பகுதி, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எதிர்கால சந்ததியினரின் இயற்கை சொத்து.
எனவே, தொழில்துறை வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையில் சமநிலையை பேணும் பொறுப்புணர்வுடன் அனுமதி வழங்கிய திணைக்களங்கள் செயல்படும் என நம்புகின்றேன்.
அத்துடன் பொதுமக்களின் அச்சங்களை மதித்து, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமாக கடலுக்குள் விடப்படும் கழிவுகளை நிறுத்த வேண்டும். கழிவுகளில் எந்த வித இரசாயண பதார்த்தங்களும் இல்லை அது குடிநீருக்கு ஒப்பானது என்றால் அந்த கழிவு நீரை மீள் சுழற்சி செய்து மீண்டும் தொழிட்சாலை தேவைகளுக்கு பயன்படுத்துமாறும், எக்காரணம் கொண்டும் தொழிற்சாலை கழிவுகளை கடலுக்குள் விடுவதை ஏற்கமுடியாது எனவும், உடனடியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மை படுத்தி கண்காணிப்பு குழு ஒன்றை உருவாக்கி தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காண்காணிக்குமாறும் வலியுறுத்தி உள்ளேன்.