
செங்கலடி பகுதியில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக பரப்பபடும் செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை.
அது முழுக்க முழுக்க சோடிக்கப்பட்ட பொய். அனுர அரசின் முகவர்களாக செயற்படும். சில தமிழ் தேசிய விரோதிகளால் பரப்பபட்ட உண்மைக்கு புறம்பான தகவல்கள்.
மிகவும் தெளிந்த அரசியல் நாகரிகத்தோடு உலகின் ஒப்பற்ற தலைவனின் காலத்தில் தமிழ் தேசிய பற்றுறுதியோடு செயற்பட்டு இன்றுவரை களத்தில் நின்று தமிழ் மக்களின் விடுதலைக்கான சமூக, ஊடக, அரசியல் பணிகளை முன் எடுத்துவரும் நான் எப்போழுதும் அறத்தின் வழியில் தான் பயணிப்பேன்.
எமது கட்சியின் தலைமைப்பீடத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் பதவி வழி மாற்றங்கள், கட்சியின் நிர்வாகத்திற்கு உட்பட்ட செயற்பாடுகள். ஒரே கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சியின் செயற்பாடுகளை பொதுவெளியில் விமர்சிக்க முடியாது என்பதோடு விமர்சிக்கவும் கூடாது.
இவ்வாறான நிலையில் சில முகநூல் பக்கங்கள் அரசின் முகவர்களாக இருந்து கொண்டு தமிழரசுக் கட்சியை துண்டு துண்டாக உடைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மிக முக்கியமாக தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை அணி அணியாக பிரித்து அவர்களை அடையாளப்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கோடு செயற்பட்டு வருகின்றனர்.
இதற்கு எமது கட்சிக்குள் இருக்கும் சிலரும் துணை போகின்றனர்.
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் அதி கூடிய வாக்குகளை பெற்று எதிரிகளின் கோட்டையை தமிழரசுக் கட்சியின் கோட்டைமாக மாற்றிய என்னையும், இன்று தமிழரசுக் கட்சியின் இந்த அணி அந்த அணி என்று எழுதி எனது அரசியல் பயணத்தை முடக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை செல்வாவின் அரசியல் தத்துவத்தை ஏற்று தமிழரசுக் கட்சிக்குள் வந்தவன் என்ற வகையில் நான் ஒரு போதும் தமிழரசுக் கட்சிக்கு எதிரான எந்த செயற்பாடுகளையும் முன்னேடுக்கப் போவதில்லை.
அதேபோல் தமிழரசுக் கட்சி நிர்வாகத்திற்குள் சனநாயக ரீதியாக மேற்கொள்ளப்படும் மாற்றங்களை விமர்சிக்கவோ அது குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்க போவதும் இல்லை. என்னுடைய அரசியல் முழுக்க முழுக்க மக்களுக்கான அரசியலாகவும், மக்களை அணி திரட்டும் அரசியலாகவே அமையும்.
அந்த வகையில் என் மீது பரப்பபடும் அத்தனை அவதூறுகளும் தமிழ் தேசியத்திற்கு ம், தமிழ் தேசிய போராட்டத்திற்கும் எதிரானதாக தான் இருக்கும்.
செங்கலடியில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக வெடி கொழுத்தி கொண்டாடப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது. இது போன்ற பல உண்மைக்கு புறம்பான செய்திகளை எனக்கு எதிராக குறிப்பிட்ட முகநூல் தளம் பல தடவைகள் வெளியிடாடுள்ளது.
குறித்த முக நூல் தளம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
அந்த முகநூல் தளம் தமிழ் தேசியத்தை அழிப்பதற்கும், தமிழரசுக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டது. அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக அனுர அரசு எவ்வளவோ அநீதிகளை செய்யும் போது அது குறித்து எழுதாது.
தமிழ் தேசியத்தின் வழிப் பயணத்தில் ஏற்படும் உள் வீட்டு குழப்பங்களை எதிரிகளுக்கு காட்டி கொடுக்கும் பணிகளையே செய்து வருகின்றனர். என தெரிவித்தார்.